மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விருதுநகர் மாவட்டத்தில் சித்தர்கள் வாழ்ந்த வரலாறு உடைய சதுரகிரி மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது, இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு பிரசித்திபெற்றது.
ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு விருதுநகர் மாவட்டம் தானிப்பாறை மலைப்பாதை வழியாகவும், சாப்டூர் வாழைத்தோப்பு மலைப்பாதை மலையாகவும், தேனி மாவட்டம் உப்புதுறையில் இருந்து செல்லும் மலைப்பாதை வழியாகவும் கால்நடையாக சென்றுவருவது வழக்கம்.
கொரோனாவை கட்டுப்படுத்த முழு முடக்கம் செய்த காரணத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடி அமாவாசை திருவிழா நடைபெறவில்லை, இந்நிலையில் நடப்பாண்டு ஆடிஅமாவாசை திருவிழா நாளை நடைபெறுகிறது.
இதற்காக நேற்று முதல் வரும் 29ம் தேதி வரை நான்கு நாட்கள் சதுரகிரி மலைக்கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவர பக்தர்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தானிப்பாறை, சாப்டூர் மலைப்பாதை வழியாக பக்தர்கள் நேற்று முதல் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று தேனி மாவட்டம் உப்புத்துறை மலைப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக வருசநாடு வனத்துறையினர் உப்புத்துறை அருகே பக்தர்களை சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்கின்றனர். மலையில் எளிதில் தீப்பிடிக்கும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் விதமாக தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருள்கள் கொண்டு செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வன விலங்குகள் நடமாட்டம் உள்ள இந்த மலைப்பாதையில் விலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கத்தி அருவாள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட வெடி பொருட்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பக்தர்களை ஒவ்வொருவராக தீவிரமாக கண்காணித்து சோதித்து சதுரகிரி கோவிலுக்கு அனுப்பி வருகின்றனர் வனத்துறையினர்
No comments:
Post a Comment