தேனி மாவட்டம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 வயது பூர்த்தியடைந்து தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து முதிர்வு தொகை பெறாத பயனாளிகளிடமிருந்து முதிர்வு தொகை கோரும் விண்ணப்பத்தினை பெறுவதற்கும், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வைப்புத் தொகை இரசீதுகள் பெறாத பயனாளிகளுக்கு வைப்புத் தொகை இரசீது வழங்கிடவும், வைப்புத் தொகை இரசீதில் உள்ள தவறுகளை திருத்தி கொள்ளவும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேற்பார்வையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாய் கிழமையன்று சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடத்தப்படவுள்ளது.


இந்த சிறப்பு முகாமில், முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, வைப்புத் தொகை பத்திரம் பெறப்பட்ட பயனாளிகள், முதிர்வுத் தொகை கிடைக்க பெறாமல் உள்ள 18 வயது நிரம்பிய பயனாளிகள், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட வைப்புத் தொகை பத்திர நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் (சான்றொப்பமிடப்பட்டது), மாற்றுச் சான்றிதழ் நகல் (சான்றொப்பமிடப்பட்டது), வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் பயனாளியின் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் முதிர்வு தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டம் மூலம் பயனடைந்து வைப்புத் தொகை இரசீது பெறாத பயனாளிகள் வைப்புத் தொகை இரசீது பெற்றுக் கொள்ளலாம் என்றும், வைப்புத் தொகை இரசீதுகளில் குழந்தையின் பெயர், பிறந்த தேதி மற்றும் தாயின் பெயர் ஆகியவற்றில் உள்ள பிழைகளை களைந்திட அதற்கான சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டம் மூலம் புதிதாக பயன்பெற ஒரு பெண் அல்லது இரண்டு பெண் குழந்தை பிறந்த மூன்று வருடங்களுக்குள், பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து, தங்கள் பகுதிகளில் செயல்படும் இ-சேவை மையம் மூலம் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பாக 04546 – 254368 என்ற எண்ணில் தகவல் பெற்றுக் கொள்ளலாம் என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment